பெங்களூரு:

கர்நாடகா மாநில சட்டமன்ற தேர்தல் மே 12ம் தேதி நடக்கிறது. இத்தேர்தலில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தில் நேற்று புழுதி புயல் தாக்கியதில் 64 பேர் இறந்தனர்.

இச்சம்பவத்தை தொடர்ந்து யோகி ஆதித்யநாத் சொந்த மாநிலத்துக்கு செல்லாமல் கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். இந்த செயலையும் பலரும் கண்டித்தனர். கர்நாடகா முதல்வர் சித்தராமையாவும் டுவிட்டரில் நேற்று விமர்சனம் செய்தார். இதேபோல் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவும் விமர்சனம் செய்திருந்தார்.

இதையடுத்து தனது பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு இன்று இரவு ஆதித்யநாத் உத்தரபிரதேசம் செல்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 6ம் தேதி வரை அவர் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டிருந்தார். எதிர்கட்சிகளின் விமர்சனத்தை தொடர்ந்து அவர் தனது பிரச்சார திட்டத்தை ரத்து செய்துவிட்டு உத்தரபிரதேசம் திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.