நொய்டா

த்திரப்பிரதேசத்தில் சுமார் 1.5 லட்சம் பேருக்கு முழுப்பணம் செலுத்தியும் வீடுகளை கட்டித்தராத ரியல் எஸ்டேட் அதிபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் யோகி  ஆதித்யநாத் எச்சரித்துள்ளார்.

உத்திரப் பிரதேச மாநிலம் நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டாவில் இதுவரை சுமார் 1.5 லட்சம் பேர் விடுகளை கட்டி தர முழுப்பணம் செலுத்தி விட்டு காத்திருக்கின்றனர்.  ஆனால் ரியல் எஸ்டேட் அதிபர்கள் ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.   இது பற்றி முதல்வர் யோகி  ஆதித்யநாத்திடம் புகார் அளிக்கப்பட்டது.

அவர் கூறியதாவது :

”எனது அரசு இந்த நான்கு மாதங்களாக வீடு வாங்குவோரையும், வீடுகளைக் கட்டும் ரியல் எஸ்டேட் அதிபர்களையும் கண்காணித்து வருகிறது.  சுமார் 1.5 லட்சம் பேர் முழுப்பணமும் செலுத்தி விட்டு வீட்டுக்காக காத்திருக்கின்றனர்.  ஆனால் ரியல் எஸ்டேட் அதிபர்களோ கட்டிட வேலைகளை பாதியில் நிறுத்தி உள்ளனர்.  இது குறித்து அமைச்சர்களும், அதிகாரிகளும் ரியல் எஸ்டேட் அதிபர்களிடம் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர்.  ஆனால் ஒரு சிலர் மட்டுமே வேலைகளை துவக்கி உள்ளனர்.  உடனடியாக வேலைகளை துவக்காவிட்டால்  நம்பிக்கை மோசடி குற்றத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு தக்க தண்டனை தரப்படும்,   இந்த அரசு ரியல் எஸ்டேட் அதிபர்களை தண்டனைக்குள்ளாக்க விரும்பவில்லை.  ஆனால் அரசை நடவடிக்கை எடுக்கும் அளவுக்கு கொண்டு செல்லக்கூடாது” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.