சென்னை: தமிழகத்தை சேர்ந்தவராக இருந்தாலும் புதுச்சேரியில் படித்திருந்தால் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு கோர முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தமிழகத்தில் மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. இந்த ஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கை வழங்க கோரி புதுச்சேரி  ஆர்.எஸ்.பாளையத்தில் உள்ள பாவேந்தர் பாரதிதாசன் அரசு பள்ளியில் படித்த விழுப்புரம் மாவட்டம், குமுளம் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

தமிழகத்தை சேர்ந்தவன் என்ற அடிப்படையில் தமிழகத்தில் இடமளிக்குமாறு மனுவில்  கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, தமிழகத்தில் பிறந்திருந்தாலும்  புதுச்சேரி மாநிலத்தில் படித்த மாணவருக்கு அரசாணையை நீட்டித்து வழங்க உத்தரவிட முடியாது என்று மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து மணிகண்டன் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், தமிழக எல்லை பகுதியில் பிறந்தாலும் புதுச்சேரியில் வசிக்காததால் அந்த அரசு இடமளிக்க மறுப்பதால், தமிழகத்தில் இடமளிக்க உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைக்கபட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தமிழக இடஒதுக்கீட்டை புதுச்சேரி மாணவருக்கும், புதுச்சேரி இடஒதுக்கீட்டை தமிழக மாணவருக்கும் வழங்க முடியாது என்று கூறி, மேல் முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்தனர்.