டில்லி:

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யும் மசோதா தாக்கல் செய்யப்பட்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிலையில், இது தொடர்பான விவாதத்தில் பங்கேற்று பேசிய திமுக எம்.பி. தயாநிதி மாறன், சபாநாயகர் நடுநிலையாளரா? என்று கேள்வி எழுப்பியவர், அப்படியிருந்தால், அவர் காஷ்மீர் எம்.பி. பரூக் அப்துல்லாவை பாதுகாத்திருக்க வேண்டும் என்று கூறினார்.

காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370, 35ஏ சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டு, காஷ்மீர் மாநிலத்தை  2 மாநிலங்களாக பிரிக்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறை வேற்றப்பட்டது. மத்திய அரசின் முடிவுக்கு எதிர்க் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், மசோதா மீதான விவவாதங்கள் இன்றும் தொடர்ந்து வருகிறது.

முன்னதாக நேற்று மசோதா தாக்கல் செய்யப்பட இருந்த நிலையில், காஷ்மீர் மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, இணையதள வசதிகள் முடக்கப்பட்டன. தொடர்ந்து மாநிலம் முழுவதும் வரலாறு காணாத அளவுக்கு ராணுவத்தினர் குவிக்கப்பட்டனர். அங்குள்ள அரசியல் கட்சித் தலைவர்கள், முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா, பரூக் அப்துல்லா, மெகபூபா முக்தி போன்றோர் எந்தவித அறிவிப்புமின்றி வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில், இன்று மக்களவை விவாதத்தின்போது கலந்துகொண்டு பேசிய திமுக எம்.பி. தயாநிதிமாறன்,  இந்த சபையின் உறுப்பினர் திரு ஃபாரூக் அப்துல்லாவைக் காணவில்லை. அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர் குறித்து, எங்களுக்கு எந்த தகவலும் இல்லை. சபாநாயகராக நீங்கள் உறுப்பினர்களைப் பாதுகாக்க வேண்டும். நீங்கள் நடுநிலை வகிக்க வேண்டும் என்று ஆவேசமாக பேசினார்.