டெல்லி: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு தீவிரவாதி, அதற்கான ஆதாரங்கள் உள்ளன என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் தெரிவித்துள்ளது, பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

டெல்லி சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு வரும் 8 ம் தேதி நடக்கிறது. வாக்குகள் எண்ணப்பட்டு வரும் 11ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. வாக்குப்பதிவிற்கு சில நாட்களே உள்ளதால் அரசியல் கட்சிகளின் பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ளன.

இந் நிலையில் டெல்லியில் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்த போது இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது: அர்விந்த் கெஜ்ரிவாலிடம் இருந்து வாக்காளர்கள் பிரிந்து சென்றுவிட்டனர்.

அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. அவர் தம் முகத்தை அப்பாவியாக வைத்துக் கொண்டு நான் என்ன தீவிரவாதியா? என்று கேட்கிறார். நீங்கள் தீவிரவாதி தான் என்பதை நிரூபிக்க நிறைய ஆதாரங்கள் உள்ளன.

நான் ஒரு அராஜகவாதி என்று கூறியிருக்கிறீர்கள். அராஜகவாதிக்கும், தீவிரவாதிக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்றார். பஞ்சாப் தேர்தல் சமயத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் காலிஸ்தான் கமாண்டருக்குச் சொந்தமான இடத்தில் தங்கியிருந்த விவகாரம் குறித்தும் ஜவ்டேகர் பேசினார்.

அவர் கூறியதாவது: அது தீவிரவாதியின் வீடு என்று உங்களுக்குத் தெரியும். தெரிந்தும் நீங்கள் அங்கேயே தங்கினீர்கள். இன்னும் வேறு என்ன ஆதாரங்கள் வேண்டும்?  என்றார்.

முன்னதாக, கெஜ்ரிவாலை  தீவிரவாதி என்று அழைத்த குற்றச்சாட்டுக்காக பாஜக எம்பி பர்வேஷ் வர்மாவுக்கு தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. இப்போது, மத்திய அமைச்சர் ஒருவரே அதே போன்று கருத்து கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.