சிறுநீர் குடிக்க வைத்து கொடுமை: தூக்கில் தொங்கிய இளைஞர்..

மத்தியப் பிரதேச மாநிலம் சிவபூர் மாவட்டம் சாஜோர் என்ற கிராமத்தைச் சேர்ந்த 20 வயது இளைஞர் விகாஸ் சர்மா.

வீட்டுப்பக்கத்தில் உள்ள பொது குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிக்கச் சென்றுள்ளார்.

அவரது பானையில் நிரம்பிய தண்ணீரை எடுத்த போது, அந்த குடிநீர் குழாய்க்குப் பக்கத்தில் இருந்த சில பானைகள் மீது தண்ணீர் தெளித்துள்ளது.

உப்பு பெறாத விஷயம் தான்.

ஆனால் அந்த பானைகளைக் கொண்டு வந்த 3 பேர் சர்மாவை அடித்து உதைத்துள்ளனர்.

அவர்களில் இருவர் பெண்கள்.

‘’ எங்கள் பானை மீது ஏன் தண்ணீரைக் கொட்டினாய்?’’ என்று கேட்டு சர்மாவின் பானையில் சிறுநீர் பெய்துள்ளார் மூவரில் ஒருவரான, மனோஜ் என்பவர்.

உச்சக்கட்டமாக, சர்மாவின் பானையில் சிறுநீர் பெய்து, அதனைக் குடிக்குமாறு சர்மாவை நிர்ப்பந்தம் செய்துள்ளனர்.

அவமானம் தாங்க முடியாத சர்மா, வீட்டுக்குச் சென்று தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தான் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணத்தையும், தன்னை தற்கொலைக்குத் தூண்டிய 3 பேரின் பெயரையும் ஒரு தாளில் எழுதி வைத்து விட்டு உயிரை விட்டுள்ளார்.

இதையடுத்து சர்மா தனது கடித ’’வாக்குமூலத்தில்’’ பெயர் குறிப்பிட்டிருந்த  மூவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

– ஏழுமலை வெங்கடேசன்