தூத்துக்குடி:

கந்துவட்டி கொடுமையால் தூத்துக்குடி அருகே வாலிபர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

கந்துவட்டி தொல்லையால் திருநெல்வேலி கலெக்டர் அலுவலகத்தில் இசக்கி முத்து என்பவர் கடந்த மாதம் குடும்பத்துடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் நடக்கும் கந்து வட்டி கொடுமைகள் வெளிச்சத்துக்கு வர தொடங்கியுள்ளன.

சமீபத்தில் நடிகர் சசிகுமாரின் உறவினர் அசோக்குமார் என்பவர் சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் கொடுத்த கடன் வசூல் நெருக்கடியால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கந்து வட்டிக்காரரின் மிரட்டலால் மாரீஸ்வரன் என்ற வாலிபர் லாயல் காலனியில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.