ஈரோடு: பள்ளிக் கல்வித்துறையில் பலவித மாற்றங்கள் அமல்செய்யப்படுவதன் தொடர்ச்சியாக, யூ டியூப் மூலமாக மாணாக்கர்கள் கல்வி கற்கும் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார் அமைச்சர் செங்கோட்டையன்.

ஈரோட்டில், பள்ளி மாணாக்கர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், “பள்ளிகளில் மாணாக்கர்கள் யூ டியூப் மூலம் கல்வி கற்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும், இதுவரை 1000 பள்ளிகளில் தலா ரூ.20 லட்சம் செலவில் Atal Tinkering Lab வசதி செய்து தரப்பட்டுள்ளது.

இதன்மூலம் மாணாக்கர்களின் அறிவியல் ஆர்வம் அதிகரிக்கப்படும். 6 முதல் 8ம் வகுப்பு மாணாக்கர்களுக்கான வண்ணச் சீருடைகள் அனைவருக்கும் வழங்கப்படும்.

விலையில்லா மடிக்கணினி அனைத்து மாணாக்கர்களுக்கும் படிப்படியாக வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கல்விக்கென்றே தனியாக ஒரு சேனல் தொடங்கப்படுவதோடு, ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிதிப்பற்றாக்குறை பிரச்சினையையும் மீறி நிறைவேற்றப்படும்” என்றார்.