டில்லி:

என்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை விசாரிக்க சிபிஐ நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. திகார் சிறையில் நாளை 30 நிமிடங்கள் ப.சிதம்பரத்தை விசாரிக்க அனுமதி கொடுக்கப்பட்டு உள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா  வழக்கில்  கடந்த ஆகஸ்ட் மாதம் 21-ம் தேதி முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம்,  சிபிஐ அமைப்பால் கைது செய்யப்பட்டார்.கடந்த ஒரு மாதத்தைத்தாண்டி அவர் திகார் சிறையில் வாடுகிறார். அவரது ஜாமின் மனு நிராகரிக்கப்பட்டு வருகிறது. அக்டோபர் 17-ம் தேதி வரை சிறையில் அடைக்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.

இந்தநிலையில் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சட்டவிரோத பணபரிமாற்றம் தொடர்பாக விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று அமலாக்கப்பிரிவு சார்பில் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை  சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய் குமார்  இன்று விசாரித்தார்.

அப்போது அமலாக்கப்பிரிவு சார்பில் ஆஜரான துஷார் மேத்தா, ‘‘இந்த வழக்கில் குற்றச்சம்பவங்கள் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தியுள்ளது. அவரை கைது செய்து விசாரணை செய்வது தேவை என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. பணபரிமாற்ற மோசடி என்பது தனியாக விசாரிக்கப்பட வேண்டும் என்பதால் அவரை அமலாக்கப்பிரிவும் விசாரணை நடத்த விரும்புகிறது’’ எனக் கூறினார்.

இதற்கு எதிர்ப்புதெரிவித்த சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல், ‘‘ஒரே வழக்கில் வெவ்வேறு விசாரணை அமைப்புகள் கைது செய்து விசாரணை நடத்த தேவையில்லை. சிபிஐ உரிய விசாரணை நடத்திய பிறகு அமலாக்கப் பிரிவும் அவரிடம் விசாரணை நடத்த தேவை என்ன? என கேள்வி எழுப்பினார்.

அதைத்தொடர்ந்து நடைபெற்ற வாதங்களைத் தொடர்ந்து, ப.சிதம்பரத்தை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி சிபிஐ நீதிமன்றம் கொடுத்தது. நாளை 30 நிமிடங்கள் விசாரிக்கலாம் என்றும், விசாரணைக்கு பிறகு தேவைப்பட்டால் ப.சிதம்பரத்தை கைது செய்வது குறித்து அமலாக்கத்துறை முடிவெடுக்கலாம் என்றும் கூறியது.

இந்த வழக்கில் நாளை தீர்ப்பு கூறுவதாகவும் நீதிபதி தெரிவித்து உள்ளார்.